பெங்களூருவில் கலவரம் நடக்க, பெரிய காரணங்கள் ஏதும் தேவை கிடையாது. தமிழர்கள் பெரிசாக ஏப்பம் விடுகிறார்கள், அதனால் தூக்கம் கெடுகிறது போன்ற காரணங்களே போதும்.
வேறு பிரச்சினை இல்லாத நேரத்தில் மொழியுணர்வு தூண்டிவிடப்படுகிறது. புதிய பிரச்சினைகளைத் தேடி அலைகிறார்கள், ஒகேனக்கல் அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையே. கபினியில், கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் திறந்துவிடப்படாத வேளைகளில் ஒகேனக்கல் காய்ந்த குட்டைதானே? அங்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் வைத்தால் என்ன, வைக்காவிட்டால் என்ன? எந்த வகையில் இது கர்நாடக மக்களைப் பாதிக்கப் போகிறது? யோசிக்கவிடுவதில்லை கிருஷ்ணாக்களும் எடியூரப்பாக்களும். தமிழன் மீதான தங்கள் மேல்நிலையை உறுதிப்படுத்துவதற்கான இன்னொரு ஆயுதமாகத் தான் இதையும் பார்க்கின்றார்கள். அப்படியே ஒகேனக்கல் அவர்களின் வாழ்வாதாரத்தின் பிரச்சினையாகவே எடுத்துக் கொண்டாலும், அதற்கும், தமிழ்சினிமா திரையிடும் அரங்குகளுக்கும் என்ன சம்மந்தம்? அவற்றை ஏன் சூறையாட வேண்டும்?
கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், பெங்களூருவின் கோபம் தமிழர்கள் மேல் மட்டும் அல்ல என்பது புரியும். சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம் என்ற பதிவில் எழுதியிருந்தேன்:
10000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு, நகர மத்தியில் 2000 ரூபாய் வாடகை வீட்டில் இருந்துகொண்டு, கைனடிக் ஹோண்டா வைத்துக்கொண்டு பந்தாவாக வலம் வந்தவன், அந்த 2000 ரூபாய் வாடகைக்கு நகரத்திலிருந்து 30 கிமீ தூரம் அனுப்பப்படுகிறான், கைனடிக் ஹோண்டாவா? ஹோண்டா சிவிக்டா என்கிட்ட என்று வார்த்தைகள் இல்லாமல் நக்கல் அடிக்கப்படுவதாக உணர்கிறான். சமூகத்தின் ஆரம்பப்படிகளில் இருந்தவன், இப்போதுக்கு கீழிருந்து சில படிகள் மட்டுமே மேல் இருக்கிறான்
இந்த மாற்றம் பெங்களூருவில் கொஞ்சம் முன்னாலிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. கணினி சாராத் தொழிலாளர்களின் சமூக அந்தஸ்து கடந்த 20 வருடங்களில் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது.
பொருளாதார ஏற்றத்தாழ்வை, ஒரு சாதாரண பெங்களூர்வாசி எப்படிப்பார்க்கிறான்? கன்னடம் பேசி உயர்வாக வாழ்ந்துகொண்டிருந்தவன், கன்னடம் பேசாதவர்களால் தாழ்வாக்கப்படுவதாக உணர்கிறான். பொருளாதாரத்தையும் மொழியையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறான். வேறு மொழி பேசுபவர்களை எதிரியாகக் கருதத் தொடங்குகிறான்.
பொருளாதாரச் சமச்சீரின்மை, கோபத்தை உருவாக்குகிறது. அந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்தலாம் என்பது மட்டும் குழப்பமாக இருக்கும் வேளையில், வருகிறார்கள் அரசியல்வாதிகள்.
காவிரி ஆற்று நீர் பிரச்சினை, இரு மாநில விவசாயிகளை மட்டுமே நேரடியாக பாதிக்கக்கூடிய பிரச்சினை. காவிரி தீரத்தில் இல்லாத பெங்களூரில் ஏன் கலவரம் வெடிக்கிறது? என்கிட்டே பணம் காசு கம்மியா இருக்கலாம் – ஆனா, நான் விட்டாத்தான் உனக்குத் தண்ணி என்று பெங்களூர்காரர்களின் அடிமனத்தில் உள்ள One upmanship தூண்டிவிடப்படுகிறது. தமிழர்களுக்குப் படியளக்கும் பெருமை தங்களிடம் இருப்பதாக வடிவமைக்கப்படுகிறது. இந்தப் பெருமை, அவர்களின் மற்ற குறைபாடுகளை மறக்கடிக்கிறது.
இந்தப் பெருமை, வேறு மாநிலத்தவர்களிடம் செல்லுபடியாவதில்லை. தமிழனுக்குத் தண்ணீர் தருகின்ற அன்னதாதாக்களாகத் தான் இருப்பதாக நினைக்கிறான். அடிபணிந்து இருக்கவேண்டிய தமிழர்கள் தங்கள் ஊரில் தன்னை விட வசதியாக வாழ்வதாக எண்ணிப் பொறுமுகிறான்
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, காவிரி நீரை விடமாட்டோம் என்று சொல்வது, அவர்களின் பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதாக நினைக்கப்படுகிறது. எந்தச் சமரசத்துக்கும் உடன்படமாட்டோம் எனச் சொல்லும் அரசியல்வாதி ஆபத்பாந்தவனாக பார்க்கப்படுகிறான். சமரசத்தை பரிசீலிக்கும் அரசியல்வாதிக்கு அது சாவுமணியாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் யாரும் அதை முயற்சிப்பதில்லை.
எல்லாத்தரப்புக்கும் இழப்பை மட்டுமே தரக்கூடிய இப்படிப்பட்ட நிகழ்வுகள் என்றுதான் தீரும்?
இன்றைய தேர்தல் வெற்றியைப் பற்றி மட்டுமின்றி – நாளைய வளமான சமுதாயத்தைப் பற்றியும் கவலைப்படும் அரசியல்வாதிகள்
இன்றைய பரபரப்பை மட்டுமே நினைக்காமல், பொறுப்புணர்வோடு உண்மைநிலையைக் காட்டும் ஊடகங்கள்
நிஜமான, எல்லாத்தரப்புக்கும் கிடைக்கும் பொருளாதார சுபிட்சம்
பெரிய கனவுகள்!
ஆனால், இவை கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் சொந்தமான பிரச்சினைகள் இல்லை. ராஜ் தாக்கரே நாலு குண்டர்களைக் கூட்டி வட இந்தியர்களை அடிப்போம் என்று கிளம்பும்போது கிடைக்கும் ஆதரவும், ஏறத்தாழ இதே போன்றதுதான். மும்பையில் கொழிக்கும் வட இந்தியர்களின் மீதான இயலாமை, மராட்டி பேசாதவர்களின் மீதான கோபமாக எதிரொலிக்கிறது.
நாளை தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பிரச்சினை வெடிக்காமல் இருக்கவேண்டுமானால், பொருளாதார ஏற்றத்தாழ்வை, மொழிரீதியாக மொழிபெயர்க்க முடியக்கூடாது. தமிழைத் தேர்ந்தெடுக்காமலேயே உயர்கல்வி வரை செல்பவன் நிச்சயமாக தொழிற்கல்விக்குத் தான் செல்வான், பெரும்பாலும் பொருளாதார சுபிட்சத்தை அடைவான். பொருளாதார சுபிட்சம் பெறாத பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவராக இருப்பார்கள் - கவனிக்கவும், தமிழ்க்கல்வி படித்தால் பொருளாதார சுபிட்சம் பெறமுடியாது எனச் சொல்லவில்லை - தேன்மாரியே பொழிந்தாலும்கூட பொருளாதார சுபிட்சம் பெறாத ஒரு சதவீதத்தினர் இருப்பார்கள், அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அன்றைய அரசியல்வாதிகளுக்கு, தமிழ் படித்தவன் - படிக்காதவன் என ஒரு ஏற்றத்தாழ்வைக் கட்டமைப்பதும், ராஜ் தாக்கரேக்களும் நாகராஜ்களும் தமிழ்நாட்டிலும் உருவாவது சாத்தியப்படக்கூடும்.
Courtesy: http://penathal.blogspot.com